மார்ச் மாத வாக்குத்தத்தம் – 2020
குறைவற்ற வாழ்வு – ஒன்றும் குறைவாயிருந்ததில்லை
லூக்கா 22:35
பின்னும் அவர் அவர்களை நோக்கி: நான் உங்களைப் பணப்பையும் சாமான்பையும் பாதரட்சைகளும் இல்லாமல் அனுப்பினபோது, ஏதாகிலும் உங்களுக்கு குறைவாயிருந்ததா என்றார். அவர்கள், ஒன்றும் குறைவாயிருந்ததில்லை என்றார்கள்.

கர்த்தர் தம்முடைய சீஷர்களை ஊழியத்திற்கு அனுப்பின போது மாற்கு 6:8&9 வழிக்குப் பையையாகிலும், அப்பத்தையாகிலும், கச்சையில் காசையாகிலும் எடுத்துக்கொண்டுபோகாமல், ஒரு தடியை மாத்திரம் எடுத்துக்கொண்டு போகவும்; கட்டளையிட்டார். பாதரட்சைகளைப் போட்டுக்கொண்டுபோகவும், இரண்டு அங்கிகளைத் தரியாதிருக்கவும் கட்டளையிட்டார்.
இந்த சூழலில் தமது சீஷர்களை பார்த்து, பணப்பை, சாமான்பை, பாதரட்சைகளும் இல்லாமல் போனபோது ஏதாவது குறைவு இருந்ததா என்று கர்த்தர் கேட்டார். அதற்கு சீஷர்கள், ஒன்றும் குறைவாயிருந்ததில்லை. இம்மாதம் நமக்கும் ஒன்றும் குறைவு படாமல் நடத்துவேன் என கர்த்தர் வாக்குக் கொடுக்கிறார். இந்த ஆசீர்வாதத்தைப் பெற நாம் செய்ய வேண்டிய காரியங்களை தியானிப்போம்.
1.பயந்தவர்களுக்குக் குறைவில்லை
சங்கீதம் 34:9 கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவருக்கு பயந்திருங்கள்; அவருக்கு பயந்தவர்களுக்குக் குறைவில்லை. கர்த்தருக்கு பயந்து வாழ்வோம், குறைவில்லா ஆசீர்வாதம் பெறுவோம்.
2.பகிர்ந்து கொடுத்தால் குறைவில்லை
அப்போஸ்தலர் 4:35 அவனவனுக்குத் தேவையானதற்குத் தக்கதாய்ப் பகிர்ந்து கொடுக்கப்பட்டது; அவர்களில் ஒருவனுக்கும் ஒன்றும் குறைவாயிருந்ததில்லை.
காகங்களைக் கவனித்து பார்த்தால், தனக்கு கிடைத்த ஆகாரத்தை, தன் இனம் அனைத்தும் பெற்றுக் கொள்ளும்படி, அவைகளையும் அழைக்கும். ஆம், பகிர்ந்து கொடுத்து வாழ்வோம், குறைவில்லாமல் வாழ்வோம்.
3.சிட்சையை அற்பமாய் எண்ணாமல், சகித்துக் கொண்டால், குறைவாயிருந்ததில்லை.
யோபு 5:17&24 இதோ, தேவன் தண்டிக்கிற மனுஷன் பாக்கியவான், ஆகையால் சர்வவல்லவருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதிரும். உம்முடைய கூடாரம் சமாதானத்தோடிருக்கக் காண்பீர்; உம்முடைய வாசஸ்தலத்தை விசாரிக்குபோது குறைவைக் காணமாட்டீர்.
கர்த்தருடைய சிட்சையை அற்பமாய் எண்ண வேண்டாம். எபி.12:5-7 நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ? ஆம், சிட்சையினால் கஷ்டத்தை அனுபவிக்கிறேனே என்று ஏங்குகிறீர்களா, கர்த்தர், உங்கள் வாசஸ்தலத்திலே குறைவில்லாமல் ஆசீர்வாதத்தை கட்டளையிடுவார். இந்த மாதம் குறைவில்லாத, நிறைவான ஆசீர்வாதத்தை கர்த்தர் தந்தருள்வாராக, ஆமென்.