கனி கொடுத்தல் – லெந்துக் கால தியானம் – 9
ஆவியின் கனி
எபேசியா் 5:9
ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும்.
கிறிஸ்துவைப் பின்பற்றுகிற ஒவ்வொரு விசுவாசியும், ஆவியின் கனியைத் தங்கள் வாழ்வில் கட்டாயம் வெளிப்படுத்த வேண்டும். ஆவியின் கனி என்ன என்று வேதம் கூறுகிறது. கலாத்தியா் 5:22 ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.
ஆவியின் கனி 9வித சுபாவங்களை உள்ளடக்கிய ஒரே கனி. அது ஆவிக்குரிய வாழ்க்கையில் நிறைந்து, சரீர வாழ்வில் வெளிப்பட வேண்டும். அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் இதுவும் கடந்த நாட்களில் சிந்தித்த நீதியின் கனிகளும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதாக காணப்படுகிறது. ஆனால், நமது ஆவிக்குள்ளான வாழ்வில் மாற்றம் பெற்று, இந்த 9 வித சுபாவங்கள் நமக்குள் கிரியை செய்யும் போது மட்டுமே, நீதியின் கனிகளாக வெளிப்படும்.
அன்பு – தேவனுடைய சுபாவம் 1யோவான் 4:8 தேவன் அன்பாகவே இருக்கிறார். (4:8) அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது.
சந்தோஷம் – தேவ ராஜ்யத்தில் நிறைந்திருப்பது ரோமர்14:17 தேவனுடைய ராஜ்யம் …… நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது.
சமாதானம் – உன்னதத்தில் உண்டாக்கப்படுகிறது
யோபு 25:2 அவர் தமது உன்னதமான ஸ்தலங்களில் சமாதானத்தை உண்டாக்குகிறார்.
நீடிய பொறுமை – கர்த்தருடைய சுபாவம் 2பேதுரு 3:9. தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.
தயவு – கர்த்தரின் சுபாவம்; கர்த்தர் கொடுப்பது சங்கீதம் 18:25. தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், உத்தமனுக்கு நீர் உத்தமராகவும்; ஆதியாகமம் 39:21. கர்த்தரோ யோசேப்போடே இருந்து, அவன்மேல் கிருபை வைத்து, சிறைச்சாலைத் தலைவனுடைய தயவு அவனுக்குக் கிடைக்கும்படி செய்தார்.
நற்குணம் – தேவன் கொடுக்கும் குணம் ரூத் 3:10 அதற்கு அவன்: மகளே, நீ கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவாயாக; ….. உன் முந்தின நற்குணத்தைப்பர்க்கிலும் உன் பிந்தின நற்குணம் உத்தமமாயிருக்கிறது.
விசுவாசம் – கர்த்தருக்கு பிரியமானது எபிரெயா் 11:6 விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம்.
சாந்தம் – ராஜாவின் (கர்த்தரின்) சுபாவம்
மத்தேயு 21:4. இதோ, உன் ராஜா சாந்தகுணமுள்ளவராய், கழுதையின் மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிக்கொண்டு, உன்னிடத்தில் வருகிறார்….
1பேதுரு 2:23. அவர் வையப்படும்போது பதில்வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்.
இச்சையடக்கம் – கர்த்தரின் கட்டளை யாத்திரா20:17 & உபாகமம் 5:21 பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக.
ஆம், ஆவியின் கனி எப்படிப்பட்டது? என்பதை வசனத்தின்படி தெரிந்துக் கொண்ட நாம், அதின்படி நம் ஆவிக்குரிய வாழ்வில் மாற்றம் பெற்று, இந்த உலக வாழ்வில் செயல்படுவோம். கனி கொடுத்தால்,
தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிப்போம். நாம் கனி கொடாவிட்டால், கீழ்க்கண்ட வசனத்தின்படி,
மத்தேயு 21:43 தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்.
எனவே, கனி கொடுப்போம், தேவனுடைய ராஜ்யத்தில் பங்கடைவோம். ஆமென்.