கனி கொடுத்தல் – லெந்துக் கால தியானம் – 8

Published by Holy Way on

நற்கிரியைகளாகிய கனிகள்
கொலோசெயா் 1:10


நீங்கள்…… சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும், …. உங்களுக்காக வேண்டுதல் செய்கிறோம்.

கொலோசெயா் 1:10


நற்கிரியைகளாகிய கனிகளை கொடுக்க அழைக்கப்படுகின்றோம். அதினிமித்தம் தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, அவருக்கு பிரியமானவர்களாக வாழ முடியும். (அப்.9:36-42) இந்த வேதப் பகுதியில், தொற்காள் என்னும் பேர்கொண்ட தபீத்தாள் என்ற சீஷியை குறித்து பார்க்கிறோம். நற்காரியங்களைச் செய்த அவளுடைய வாழ்கையிலிருந்து சில காரியங்களை தியானிப்போம்.


1. நற்கிரியை ஒரு கூட்ட ஜனங்களை சேர்க்கும்
அவள் நற்கிரியைகளை செய்ததினால், அவளோடு அநேகர் இருந்ததைப் பார்க்கிறோம். அப். 9:41பரிசுத்தவான்கள், விதவைகள் அவளோடு இருந்ததைப் பார்க்கிறோம். லூக்கா 16:9. நான்(இயேசு) உங்களுக்குச் சொல்லுகிறேன், … அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள். என்று கூறினார். ஆம், நாம் செய்யும் நற்கிரியைகள் மூலம் சிநேகிதரை சம்பாதித்து கொள்ள வேண்டும்.
1கொரிந்தியா் 9:19. நான் ஒருவருக்கும் அடிமைப்படாதவனாயிருந்தும், நான் அதிக ஜனங்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, என்னைத்தானே எல்லாருக்கும் அடிமையாக்கினேன். எவ்விதத்திலும் ஜனங்களை சம்பாதிக்க வேதம் கூறுகிறது. எனவே நற்கிரியைகளை செய்வோம்.


2. நற்கிரியை பலவீனரை நம் பக்கம் சேர்க்கும்
அப்போஸ். 9:39 அப்பொழுது விதவைகளெல்லாரும் அழுது, தொற்காள் தங்களுடனே கூட இருக்கையில் செய்திருந்த அங்கிகளையும் வஸ்திரங்களையும் காண்பித்து, அவனைச் சூழ்ந்து நின்றார்கள்.
விதவைகள் அவளோடு இருந்தனர்.
1கொரிந்தியா் 9:22. பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப்போலானேன்; எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன். ஆம், பவுல் சொன்னதைப் போல, பலவீனமான ஜனங்கள் (விதவைகள், ஒடுக்கப்பட்டவர்கள், தரித்திரர், சிறுமைப்பட்டவர்கள்) நம் நற்கிரியைகள் மூலம் நம்மிடம் வருவார்கள். 1சாமுவேல் 22:2. ஒடுக்கப்பட்டவர்கள், கடன்பட்டவர்கள், முறுமுறுக்கிறவர்கள் யாவரும் அவனோடே கூடிக்கொண்டார்கள்; அவன் அவர்களுக்குத் தலைவனானான்; இந்தப் பிரகாரமாக ஏறக்குறைய நானூறுபேர் அவனோடிருந்தார்கள்.
ஆம், தாவீதோடே கூடிக் கொண்ட ஜனங்களைப் பார்க்கிறோம். தாவீதின் நற்கிரியைகள் பலவீனர் அவனோடு சேரும்படி செய்தது.
எனவே பலவீனமான ஜனங்களுக்கு நற்கிரியைகளை செய்வோம். அவர்கள் நம்மோடு வருவர்.


3. நற்கிரியை மனுஷர் தேவனை மகிமைப்படுத்த ஏதுவாகும்
மத்தேயு 5:16 இவ்விதமாக மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது. நாம் நற்கிரியைகளை செய்யும்போது, மனுஷர் கர்த்தரை மகிமைப்படுத்துவார்கள். தானியேல் 2:47. ராஜா தானியேலை நோக்கி: நீ இந்த மறைபொருளை வெளிப்படுத்தினபடியினால் மெய்யாய் உங்கள் தேவனே தேவர்களுக்கு தேவனும், ராஜாக்களுக்கு ஆண்டவரும், மறைபொருள்களை வெளிப்படுத்துகிறவருமாயிருக்கிறார் என்றான். ஆம், தானியேல் நற்கிரியை செய்தார். ராஜாவின் சொப்பனத்துக்கு, ஞானிகளும் அர்த்தம் சொல்ல முடியாத நிலையில், அவர்கள் அழிக்கப்பட இருந்த போது, கர்த்தர் தானியேலுக்கு கொடுத்த ஞானத்தினால், அர்த்தம் சொன்னபோது, ராஜா தேவனை மகிமைப்படுத்தினான். ஆம், கர்த்தரின் ஒத்தாசையோடு நற்கிரியைகளை செய்வோம்.


தீத்து 3:14. நம்முடையவர்களும் கனியற்றவர்களாயிராதபடி குறைவுகளை நீக்குகிறதற்கேதுவாக நற்கிரியைகளைச் செய்யப்பழகட்டும்.
மேற்கண்ட வசனத்தின் படி, நற்கிரியைகளை நாம் செய்யாத போது, கனியற்றவர்களாக இருப்போம். ஆகவே, நற்கிரியைகளை செய்தால், ஜனங்களை ஆதாயப்படுத்தி கொள்ள முடியும்; பலவீனர் நம்மோடு கூடிக் கொள்வர்; கர்த்தருக்கு மகிமை உண்டாகும். எனவே, நற்கிரியைகளை செய்ய பழகுவோம். ஆமென். 🙏🏻

Categories: Messges