கனி கொடுத்தல் – லெந்துக் கால தியானம் – 7

Published by Holy Way on



நீதியின் கனி
பிலிப்பியா் 1:10. தேவனுக்கு மகிமையும் துதியுமுண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி,


நீதியின் கனிகள் இயேசு கிறிஸ்து வினால் வருகிறது என காண்கிறோம். கிறிஸ்துவின் மூலம் வருகிற நீதியின் கனிகளால் நாம் நிறைந்திருக்க வேண்டும் என்று பவுல் கூறுகிறார். ஆமோஸ்6:12 …நீதியின் கனியை எட்டியாகவும் மாற்றினீர்கள், என வாசிக்கிறோம். அப்படியானால், நாம் செய்ய வேண்டியது, நாம் கிறிஸ்துவைப் பற்றி அறிகிற அறிவில் வளரும் போது மட்டுமே நீதியின் கனிகளால் நிறைந்திருக்க முடியும். அப்போது மட்டுமே நாம் கனியற்றவர்களாயல்ல, கனி கொடுக்கிறவர்களாய் மாறுவோம். 2பேதுரு 1:5-8 இப்படியிருக்க, நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும், ஞானத்தோடே இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடே பொறுமையையும், பொறுமையோடே தேவபக்தியையும்,
தேவபக்தியோடே சகோதர சிநேகத்தையும், சகோதர சிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள். இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால், உங்களை நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும் கனியற்றவர்களுமாயிருக்கவொட்டாது.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிகிற அறிவில் வளர்ந்து வருகிறோம் என்பதற்கு இந்த வசனத்தின்படி, அதிக ஜாக்கிரதையாக 8வித காரியங்களிலே நாம் பெருக வேண்டும். அவை, விசுவாசம், தைரியம், ஞானம், இச்சையடக்கம், பொறுமை, தேவபக்தி, சகோதர சிநேகம், அன்பு ஆம், இவைகளிலே நாம் பெருகுவதோடு மட்டுமல்லாமல், மற்றவர்களுக்கும் வழங்கவேண்டும். இவைகளை சிறு குறிப்புகளாக தியானிப்போம்.


விசுவாசம் எபிரெயா் 11:6 விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத்தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.
தைரியம் எபேசியா்3:12. அவரைப் பற்றும் விசுவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடே அவரிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது.
ஞானம் 1கொரிந்தியா் 1:24 …..எவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களுக்குக் கிறிஸ்து தேவபெலனும் தேவஞானமுமாயிருக்கிறார்.
இச்சையடக்கம் 1கொரிந்தியா் 9:25. பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம்.


பொறுமை ரோமா் 15:4. தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது.
தேவபக்தி 1தீமோத்தேயு 4:8
……தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது. (தீத்து 1:3)


சகோதர சிநேகம் ரோமா் 12:10. சகோதர சிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்; 1பேதுரு 1:22. ஆகையால் நீங்கள் மாயமற்ற சகோதர சிநேகமுள்ளவர்களாகும்படி, ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்கள் ஆத்துமாக்களைச் சுத்தமாக்கிக்கொண்டவர்களாயிருக்கிறபடியால், சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள்;
அன்பு
2யோவான்1:6 நாம் அவருடைய கற்பனைகளின்படி நடப்பதே அன்பு; நீங்கள் ஆதிமுதல் கேட்டிருக்கிறபடி நடந்துகொள்ளவேண்டிய கற்பனை இதுவே. 1யோவான் 2:5 அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்; 1 பேதுரு 4:8 எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும்.


ஆம், நாம் மேற்கண்ட வசனத்தில் நடக்கும் போது, கிறிஸ்துவை அறிகிற அறிவிலே வளருவோம்; கிறிஸ்துவின் மூலம் வரும் நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாக வாழ்வோம். ஆமென்.

Categories: Messges