மனந்திரும்புதல் – லெந்துக் கால தியானம் – 4

Published by Holy Way on

இன்றைய தியானம்

கனிகளைக் கொடுத்தல்.

மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்.

மத்தேயு 3:8
மத்தேயு 3:8


வனாந்தரத்திலே ‘மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது’ என்று பிரசங்கம் பண்ணின யோவான் ஸ்நானன், தன்னிடத்தில் வந்த ஜனங்களைப் பார்த்து, சொன்ன வார்த்தைதான் மேற்கண்ட வசனம். மனந்திரும்புதல் என்பது கனிகளைக் கொடுக்கும் வாழ்க்கை. நாம் கனிகளைக் கொடுக்க அழைக்கப்படுகின்றோம். அதற்காக என்ன செய்ய வேண்டும்? தன்னிடத்தில் வந்த ஜனங்கள் ‘மனந்திரும்புதலுக்கு ஏற்ற நல்ல கனிகளைக் கொடுக்க நாங்கள் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டனர். (லூக்கா 3:8-14) அதனடிப்படையில் நாம் சற்று சிந்திப்போம்.


1.பிறருக்கு கொடுத்து வாழ்தல் (லூக்கா 3:10&11) இரண்டு அங்கிகளையுடையவன் இல்லாதவனுக்குக் கொடுக்கக்கடவன். ஆகாரத்தை உடையவனும் அப்படியே செய்யக்கடவன். ஏசாயா 58:7 உண்மையான உபவாசம் என்ன? என்பதை ஏசாயா தீர்க்கதரிசி மூலம் கர்த்தர் சொல்லுகிறது, பசியுள்ளவனுக்கும், வஸ்திரம் இல்லாதவர்களுக்கும், கொடுத்து வாழ்வது, இல்லை என்று வருகிறவனுக்கு நம்மிடம் இருப்பதை மறைத்துக் கொள்ளாமல் கொடுத்து வாழ்வதே உண்மையான உபவாசம். நெகேமியா 8:10 ஒன்றுமில்லாத வர்களுக்கு கொடுத்து, கர்த்தருக்குள் மகிழ்ச்சியாக இருப்பதே நமக்கு பெலன். கொடுத்து வாழ்வோம்.


2.நியமத்திற்குட்பட்டு வாழ்தல்(லூக்கா 3:12&13)
ஆயக்காரரும் வந்து நாங்கள் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்ட போது, உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறதற்கு அதிகமாய் ஒன்றும் வாங்காதிருங்கள், என கூறினார்.
அவர்களுக்கு மட்டுமல்ல, நாமும் நமக்கு நியமிக்கப்பட்ட நியமங்களுக்கு உட்பட்டு நடக்க வேண்டும். ஆபிரகாம் கர்த்தர் கொடுத்த நியமத்தின்படி வாழ்ந்தார்; அதனால் ஆசீர்வாதம் பெற்றார். (ஆதி.26:4&5) சகரியா & எலிசபெத் கர்த்தரிட்ட சகல…. நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து, தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார்கள். (லூக்கா 1:6) நாமும் கர்த்தர் குடும்பத்திற்கு ஏற்படுத்தின நியமத்தின்படியும், ஆலயத்தின் நியமத்தின்படியும், தேசத்தின் நியமத்தின்படியும், வாழ அழைக்கப்படுகிறோம். சுருங்கச் சொன்னால், கர்த்தர் நாம் வாழ்வதற்கு சத்திய வேதத்தில் கொடுத்த நியமத்தின்படியே வாழ்வோம்.


3.போதுமென்கிற மனதுடனே வாழ்தல்
(லூக்கா 3:14) போர்ச்சேவகரும் அவரிடத்தில் வந்து நாங்கள் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டனர். … நீங்கள் ஒருவருக்கும் இடுக்கண் செய்யாமலும், பொய்யாய்க் குற்றஞ்சாட்டாமலும், உங்கள் சம்பளமே போதுமென்றும் இருங்கள்.
நமக்கு இருக்கிறவைகள் போதும் என்ற எண்ணம் இருக்கும் பட்சத்தில் மற்றவர்கள் மீது குற்றம் சாட்டமாட்டோம், வீண் பழி சுமத்த மாட்டோம், அதிகத்திற்கு ஆசைப்படமாட்டோம்.
1தீமோ.6:6 போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.
தொடர்ந்து 7-11 வசனங்களை வாசித்தால், இன்றைய உலகில் மனிதன் பணத்திற்கு மட்டுமே முதலிடம் கொடுக்கிறான் என்பது தெளிவாகிறது. உறவுகளைக் காட்டிலும் பணமும், பணத்திற்காக உறவுகளையும், நண்பர்களையும் மட்டுமல்லாமல், தேவனைவிட்டு தூரம் செல்லுகின்ற நிலையை பார்க்கிறோம். ‘அன்றன்றுள்ள அப்பத்தை எங்களுக்கு இன்று தாரும்’ என்று கற்றுக் கொடுத்த கர்த்தரை மறக்காமல் வாழ அழைக்கப்படுகிறோம்.
மேற்கண்ட காரியங்களை சிந்தித்து, நல்ல கனிகளைக் கொடுக்க முயல்வோம். கர்த்தர் நமக்குத் துணை செய்வாராக. ஆமென்.