மனந்திரும்புதல் – லெந்துக் கால தியானம் – 3

Published by Holy Way on

இன்றைய தியானம்


Matthew 12:41

யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள்.

மத்தேயு 12:41


மனந்திரும்புதல்
லெந்துக் கால தியானம் – 3



மனந்திரும்புதல் என்றால் என்ன?

மத்தேயு 12:41 யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள், என்று இயேசு கிறிஸ்து கூறினார்


1.கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டு மாற்றம் பெறுவது
யோனா3:1-10 இந்த பகுதியில் கர்த்தர் யோனாவுக்கு இரண்டாம் தரம் சொன்னது. நீ போய் நினிவேக்கு விரோதமாய் பிரசங்கி. யோனா போய் கர்த்தரின் வார்த்தையின்படி பிரசங்கித்தார். (யோனா 3:5) அப்பொழுது நினிவேயிலுள்ள ஜனங்கள் தேவனை விசுவாசித்து, உபவாசஞ்செய்யும்படிக் கூறினார்கள். மனந்திரும்புதலின் முதல் படி ‘தேவனை விசுவாசிப்பது’. அப்படியென்றால் என்ன? (ரோமர் 4:20, 21) ஆபிரகாமுடைய வாழ்விலிருந்து சற்று பார்ப்போம்.

  • தேவனுடைய வாக்குத்தத்தத்தை சந்தேகப்படாமல் ஏற்றுக் கொள்வது.
  • தேவன் வாக்குத்தத்தத்தை நிறைவேற்ற வல்லவர் என உறுதியாக நம்புவது.
  • அதற்காக தேவனை மகிமைப்படுத்துவது. அவ்வண்ணமே விசுவாசிப்போம்; மன மாறுதல் பெறுவோம்.


2.தேவனை நோக்கி கூப்பிடுதல்
யோனா 3:8 மனுஷரும் மிருகங்களும் இரட்டினால் மூடிக்கொண்டு, தேவனை நோக்கி உரத்த சத்தமாய்க் கூப்பிடவும்,….
‘இரட்டு’ தாழ்மையுடன் நடந்து கொள்வதை குறிக்கிறது. கர்த்தருக்கு முன்பாக நம்மை தாழ்த்தி, கர்த்தரை நோக்கிக் கூப்பிட வேண்டும். லூக்கா 18:13 ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக் கொண்டு: தேவனே! பாவியாகிய என் மேல் கிருபையாயிரும் என்றான். இந்த ஆயக்காரனை போல நமது ஜெபமும், நம்மை தாழ்த்தி கர்த்தரை நோக்கி ஜெபிக்கிறதாய் இருக்க வேண்டும்.


3.பொல்லாத வழியையும், கொடுமையையும் விட்டு விடுதல்
யோனா3:8 அவரவர் தம்தம் பொல்லாத வழியையும் தம்தம் கைகளிலுள்ள கொடுமையையும் விட்டுத் திரும்பவுங்கடவர்கள். ஏசாயா 1:16 உங்களைக் கழுவிச் சுத்திகரியுங்கள்; உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றி விட்டு, தீமை செய்தலை விட்டு ஓயுங்கள். கர்த்தர் விரும்பும் காரியம் இதுவே. லூக்கா 19:1-10 இவ்வேதப் பகுதியில் சகேயு என்ற மனிதன் ‘பாவி’ என்று ஜனங்களால் தீர்மானிக்கப்பட்டவன். அவன் இயேசுவை காண விரும்பினான். இயேசுவும் அவனைக் கண்டு, இன்றைக்கு உன் வீட்டில் தங்கவேண்டும் என்றார். அப்போது தான் அவன் கீழ்க்கண்டவாறு கூறினான். (8) கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான். ஆம் சகேயு தன் பழைய வாழ்வின் காரியங்களை விட்டு விட்டான். இரட்சிப்பைப் பெற்றார்.


ஆம், மனந்திரும்புதலின் அனுபவமாகிய, கர்த்தரின் வார்த்தையைக் கேட்டு விசுவாசிப்போம்; நம்மை தாழ்த்தி கர்த்தரை நோக்கி கூப்பிடுவோம்; பழைய பொல்லாத கிரியைகளை விட்டு விடுவோம். இந்த புதிய அனுபவத்தின் மூலம் கர்த்தரின் ஆசீர்வாதமாகிய தேசத்தின் நன்மையைப் பெறுவோம். ஆமென்.