மனந்திரும்புதல் – லெந்துக் கால தியானம் – 2

Published by Holy Way on



நீங்கள் மனம் பொருந்திச் செவிகொடுத்தால், தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள்.

ஏசாயா 1:19

இன்றைய தியானம்



லெந்துக் கால தியானம் – 2
மனந்திரும்புதல்


இந்த காலங்களில் நாம் மனம் பொருந்திச் செவிகொடுக்க அழைக்கப்படுகிறோம். எதற்காக?
ஏசாயா 1:18-ல் உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப் போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப் போலாகும். நாம் பாவமன்னிப்பு பெறும்படி அழைக்கப்படுகின்றோம்.


1.பாவத்தை மறைக்காமல் அறிக்கை செய்ய வேண்டும்
நீதி.28:13 தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டு விடுகிறவனோ இரக்கம் பெறுவான். யோசுவா 7அதிகாரத்தில் இஸ்ரவேலர் எரிகோவைப் பிடித்த போது யூதா கோத்திரத்தில் ஆகான் என்பவன் சாபத்தீடானதிலே சிலதை எடுத்து ஒளித்து வைத்துக் கொண்டான். அதினால் இஸ்ரவேலர் மீது கர்த்தர் கோபம் கொண்டார். அவர்கள் ஆயி பட்டணத்திற்கு விரோதமாக யுத்தம் செய்ய சென்றபோது, கர்த்தர் இஸ்ரவேலர் முறிந்து விழும்படி செய்தார். காரணம் ஒருவன் செய்த பாவம் முழு ஜனத்துக்கும் தோல்வியாய் முடிந்தது. இறுதியில் அவன் கண்டுபிடிக்கப்பட்டான். அப்போது யோசுவா அவனிடம் கேட்டபோது, (யோசுவா7:19) மெய்யாகவே நான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன்; என்று சொன்னான். அவன் முதலில் கர்த்தரின் வார்த்தையை உணராமல், பாவத்தை செய்து, மறைத்ததினாலே, அவன் அழிவைத் தேடிக் கொண்டான். 1யோவான்5:16 மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைத் தன் சகோதரன் செய்ய ஒருவன் கண்டால், அவன் வேண்டுதல் செய்யக்கடவன், அப்பொழுது அவனுக்கு ஜீவனைக் கொடுப்பார்.
ஆம் பாவத்தை அறிக்கை செய்வோம்; இரக்கமாகிய ஜீவனைப் பெறுவோம்.


2.பாவங்களை மன்னிப்பது யார்? என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
1யோவான் 1:9 நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் (இயேசு கிறிஸ்து) உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். மாற்கு 2:1-12 இந்த பகுதியில், திமிர்வாதக்காரனை இயேசு கிறிஸ்து சுகமாக்கின சம்பவத்தில், அவன் வியாதிக்கு காரணம் பாவம் என்பதை இயேசு கிறிஸ்து அறிந்து, பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று சொன்னபோது, வேதபாரகரில் சிலர், பாவங்களை மன்னிக்க இவர் யார் என்று தங்கள் இருதயங்களில் சிந்தித்து கொண்டிருந்த போது, இயேசு சொன்ன வார்த்தை (10) பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறியவேண்டும், என்று சொன்னார்.
ஆம், நாம் பாவங்களை இயேசு கிறிஸ்துவிடம் அறிக்கையிடும் போது, அவர் நம்முடைய பாவங்களை மன்னித்து, நம்மை சுத்திகரிக்க வல்லவராயிருக்கிறார்.


3.பாவமன்னிப்புக்கு என்ன தேவை? என்பதை அறிந்துகொள்ள வேண்டும்
எபிரெயர்9:22 இரத்தம் சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது. எந்தவொரு இரத்தமும் நிரந்தர பாவமன்னிப்பை அளிக்க முடியாது. மாறாக வேதம் கூறுகிறது, 1யோவான்1:7&2:1, 2 இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசு கிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார். நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே.

ஆம் (எபி.12:24) கிறிஸ்துவின் இரத்தம் நமக்காக நன்மையானவைகளை பேசும். நாம் இயேசு கிறிஸ்துவினிடத்தில் வரும்போது, நன்மையாகிய பாவமன்னிப்பை, சிலுவையில் கள்ளனுக்கு கொடுத்தது போல, நமக்கும் தந்தருள்வார்.
இந்த வசனத்தின்படி, நாம் நன்மைகளைப் பெற கர்த்தர் கிருபை செய்வாராக. ஆமென்
.