மனந்திரும்புதல்

Published by Holy Way on


லெந்துக் கால தியானம்


நீங்கள் மனம் பொருந்திச் செவிகொடுத்தால், தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள்.

ஏசாயா 1:19


மனந்திரும்புதல்…



இந்த காலங்களில் நாம் மனம் பொருந்திச் செவிகொடுக்க அழைக்கப்படுகிறோம். எதற்காக?
ஏசாயா 1:18-ல் வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; என வாசிக்கிறோம். கர்த்தரோடு நாம் வழக்காட முடியுமா?


1.சர்வ வல்லவரோடு வழக்காட கூடாதென ஒப்புக் கொள்வோம்
யோபு 40:2 சர்வவல்லவரோடே வழக்காடி அவருக்குப் புத்தி படிப்பிக்கிறவன் யார்? என்று யோபுவிடம் கர்த்தர் கேட்டார் என பார்க்கிறோம். ஆம் சர்வவல்லவரோடே வழக்காட மனிதனால் கூடாது. அவரிடத்தில் நான் நீதிமான் என்று, ஒருவனும் அவரை குற்றம் பிடிக்க முடியாது. ஆம், அவர் சர்வ வல்லமையுள்ளவர்.


2.உத்தரவு சொல்ல முடியாதென ஒப்புக் கொள்வோம்
யோபு9:3 அவர் அவனோடே வழக்காடச் சித்தமாயிருந்தால், ஆயிரத்தில் ஒன்றுக்காகிலும் அவருக்கு உத்தரவு சொல்லமாட்டானே.
யோபு பக்தன் தான் இந்த அறிக்கை செய்கிறார். கர்த்தர் மனிதனோடு வழக்காட வந்தால், அவர் ஆயிரம் கேள்விகள் கேட்டால் மனிதன் ஒரு கேள்விக்குக் கூட பதில் சொல்ல முடியாது. அதை யோபு 40:2&7-ல் இவைகளுக்கு உத்தரவு சொல்லென்றும், நான் உன்னைக் கேட்பேன்; நீ எனக்கு உத்தரவு சொல்லு என்றும் கூறுகிறார். ஆம், கர்த்தரோடு வழக்காட அவரின் கேள்விகளுக்கு பதில் சொல்ல மனிதனால் கூடாது.


3.இரக்கத்துக்கு கெஞ்சுவோம்
யோபு9:15 நான் நீதிமானாயிருந்தாலும் அவரோடே வழக்காடாமல், என் நியாயாதிபதியினிடத்தில் இரக்கத்துக்கு கெஞ்சுவேன். நாம் நீதியான காரியங்களை செய்து நீதிமானாக காணப்பட்டாலும், ஏசாயா 64:6-ல் சொல்லப்பட்ட படி, எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தை போல இருக்கிறது.


இந்த நாட்களில், நாம் சர்வவல்லவரோடே வழக்காடாமல், அவரின் ஒரு கேள்விக்குக் கூட உத்தரவு சொல்ல இயலாது என்பதையும், நம்முடைய நீதிகளெல்லாம் ஒன்றுக்கும் உதவாத வைகள் என்பதையும் ஒப்புக் கொண்டு, நியாயாதிபதியினிடத்தில் இரக்கத்துக்கு கெஞ்சுவோம். அப்பொழுது தேசத்தின் நன்மையைப் புசிப்போம். ஆமென்.