நாம் எப்படி இருக்க வேண்டும்…

Published by Holy Way on

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே!

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நல்ல நாமத்தில் பரிசுத்த வழி ஊழியத்தின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கர்த்தர் நம்முடைய வாழ்வில், நாம் எப்படி இருக்க வேண்டும் என்று தெளிவாக சொல்லிய மூன்று காரியங்களை சற்று தியானிப்போம்.

நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்.

மத்தேயு 5:13

உப்பு இல்லாமல் எந்தவொரு சமையலும் ருசியாக இருக்காது. வேதாகமத்தில் யோபு 6:6-ல் ருசியில்லாத பதார்த்தத்தை உப்பில்லாமல் சாப்பிட கூடுமோ? என்று வாசிக்கிறோம். உப்பு வெண்மையான நிறம் உள்ளது. ருசி கொடுக்க கூடியது. நாமும் நம் வாழ்வில் பரிசுத்தமாக வாழ்ந்து, ருசி கொடுக்கிறவர்களாக, மற்றவர்களுக்கு பிரயோஜனமாக வாழ கர்த்தர் விரும்புகிறார்.

நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்.

மத்தேயு 5:14

எங்கே வெளிச்சம் காணப்படுகிறதோ, அதைத் தேடி பூச்சிகள் வரும். வெளிச்சம் இருக்குமிடத்தில், இருள் மறைந்து விடும். அவ்வண்ணமே நாமும் வெளிச்சம் போன்ற நற்காரியங்களைச் செய்யும்போது, ஜனங்கள் நம்மைத் தேடி வருவார்கள். அறியாமை, மூடப் பழக்க வழக்கங்களாகிய இருளில் மூழ்கி கிடக்கிற ஜனங்கள் நம் கிரியைகளைப் பார்த்து, மனந்திரும்ப ஏதுவாகும்.

நீங்கள் எனக்கு சாட்சிகளாயிருப்பீர்கள்.

அப். 1:8

நம்முடைய வாழ்க்கை கர்த்தருக்கு சாட்சியாக இருக்க வேண்டும். நாம் சாட்சியாக வாழ, நமக்கு பரிசுத்த ஆவியானவரின் பெலன் தேவை. பரிசுத்த ஆவியானவர் நம்மை ஆட்கொண்டால் மட்டுமே நாம் சாட்சியாக வாழ முடியும். நாம் பரிசுத்த ஆவியானவரைப் பெற்று, அவரின் பலத்தோடு, நம்முடைய பார்வை, வார்த்தைகள், எண்ணங்கள், கிரியைகள், நடக்கை இவற்றின் மூலம் நம் வீட்டிலும், (குடும்பத்திலும்), நம் ஊரிலும், நம் தேசத்திலும், பூமியின் எல்லா பகுதிகளிலும் சாட்சியாக வாழ வேண்டும். இவ்விதமாய் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு சாட்சியாக நாம் ஜீவிக்கும்போது, கர்த்தரும் பரலோகத்தில் தேவதூதர்கள் முன்பாக நம்மை குறித்து சாட்சி கொடுப்பார்.

ஆம், அன்பானவர்களே! நாம் உப்பாக இருப்போம்; வெளிச்சமாக இருப்போம்; கர்த்தருக்கு சாட்சிகளாக வாழ்வோம். கர்த்தரின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஆமென்.